Sunday, 19 January 2020

My Indonesia Trip

யோக்யகர்த்தா 22.12.19.
இந்தோனேஷியாவின் முக்கிய நகரம் யோக்யகர்த்தா - மாதர மன்னன் நிறுவியது. இந்த ஏர்போர்ட்டின் பெயர் :
Adisutjipto (அந்த ஊரு அண்ணாதுரை பேருபோல - கூகுளிச்சி கண்டுபுடிங்க ) ... கம்போடியா செல்ல விசா கட்டணம் 3500 ரூ. ஆனால், இந்தோனேஷியாவுக்கு வந்தபின் விசா (Visa on arrival) வாங்கினால் போதும் என்றார்கள். எவ்வளவு கேக்கப் போறாங்களோன்னு யோசிச்சிக்கிட்டே லைனில் நின்னோம். ஒருத்தருக்கு ஸ்டாம்ப் அடிக்க அரை நிமிடம் கூட ஆகவில்லை.. செம வேகம். விசாவுக்கு கட்டணம் இல்லையாம்... ஆனா அதுக்கப்பறம் போதைப் பொருள் இருக்கான்னு பாக்க குதிரை சைஸ்ல ஒரு மோப்ப நாய நம்மள மோந்து பாக்க உட்டான் பாருங்க... புளிய கரைச்சிடுச்சி... அப்பப்ப வெரிகுட் வெரிகுட்னு வேற பாராட்டிக்கிட்டே வந்தாரு ஆஃபிஸர்.. வியர்வை நாற்றம் அடிக்காத  சட்ட போட்டுட்டு வந்ததுக்கு நம்மளத்தான் பாராட்டுறார்னு நெனைச்சேன் - நாயப் பாராட்னாராம். 

சஞ்சய மன்னன் 8 - 10 நூற்றாண்டில் கட்டிய பிரம்பணன் ( பிராமணனலிருந்து வந்த வார்த்தையாம்) 
கோயில் சிறப்பைச் சொல்ல சில மணிகள் ஆவும். ஒரே வளாகத்தில் மொத்தம்  240 கோயில்களை 222 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டினான் என்கிறது வரலாறு. (நல்லவேள வாட்ஸப் அப்போ இல்ல - இருந்தா இது சாத்தியமா?)  அஸ்திவாரம் தவிர அனைத்து 
கோயில்களும் 
 நிலநடுக்கத்தால் தரைமட்டமாகி விட்டன.  ஆனால்  200 கோயில்களையும் புதுப்பிக்கத் திட்டமிட்டு அவற்றுள் 20 முடிந்து விட்டன கடந்த 100 ஆண்டுகளில்.  இந்த இருபதைப் பார்க்கவே நமக்கு 2 நாள் ஆவும். உள்ளே நுழைய டிக்கட் நம்ம ஊர் ரூ. 3500 வாங்கறாங்க (வெளிநாட்டினர்க்கு).   இலவசமாக வெல்கம் ட்ரிங்க் தந்தார்கள், (டீ, காபி, தண்ணீர் ஏதேனும் ஒன்று இலவசமாம் - மூணுமே ஒரே டேஸ்ட்தான்னு நாங்க 3 பேரும் கண்டுபுடிச்சிட்டோம் ). முழுக்க முழுக்க லாவா எரிமலைக்  குழம்பு கற்களால், Lock System எனப்படும் முறையில் கட்டப்பட்டது (தஞ்சை கோயிலும் இப்படித்தான் - இக்கோயிலை இடிக்க முடியாது.. வே(ணு)ணாம்னா மேலேயிருந்து அவிழ்த்துதான் எடுக்கணும்)
... பிரம்மா, சிவன், விஷ்ணு மூவருக்கும் தனித்தனியான  பிரம்மாண்டமான கோயில்கள், அதற்கு முன்னே அவர்களின் வாகனங்களான அன்னம், நந்தி, கருடன் இவற்றிற்கும் . கோயில்கள் உள்ளன - மிக அற்புதமான கலை நுணுக்கங்களுடன். இப்போ எல்லா தோண்டு, நடு கருவிகளும் இருந்தும்  நம்ம ஊர்ல ஒரு கரண்ட் கம்பத்த நட10 பேர் 12 வட, டீ சாப்டுட்டு செய்றாங்க. எதுவுமே இல்லாத எட்டாம் நூற்றாண்டில் எத வச்சி அளந்து, வெட்டி, கட்டி, ட்ரான்ஸ்போர்ட்டி, எரக்டிருப்பார்கள் ? இவற்றையெல்லாம் எங்களுக்கு விளக்குவதற்கு 10 USD யில் ஒரு கைடு வந்தார். மிக இனிமையாகத் தெளிவாக அனைத்தையும் விளக்கினார். நிச்சயமாக பல இந்தியர்களை விடவும் அதிகமாக ராமாயண, மகாபாரதக் கதைகளை அறிந்திருக்கிறார். (கல்லூரிப் பாடத் திட்டத்தில் உண்டாம் ) தஞ்சைப் பெரிய கோயில் , மாமல்லபுரம் போன்று கல் panel களில் இந்து புராணக் காட்சிகளை கற்களில் இக்கோயிலில் தத்ரூபமாக  வடிவமைத்திருக்கின்றனர்.
 கருவுற்ற சீதை வயிற்றின் வளைவு,  காவல் தெய்வங்களின் கவின்மிகு தோற்றம்,  சீதையை ராவணன் தூக்கிச் சென்றது, வாலி, சுக்ரீவன் சண்டை, லவ, குச விளையாடல்கள் என்று நுணுக்கமான வேலைப்பாடுகள். தமிழக சிற்பிகள் பலர் வந்து செய்ததாகக் கூறுகிறார். போகும் வழியில் பல இடங்களில் எங்கள் கைடு இலவசமாக உள்ளூர் மக்களுக்கு ஜாவனிய மொழியில் சில விளக்கங்கள் தந்தார். மேலே ஏறாதீர்கள் என்று அங்கங்கே ஆங்கிலத்தில் போர்டு எழுதி வைத்திருந்தும் Patel value கூட்டப் போட்டோ எடுக்க மேலே ஏறிய வெள்ளைத் தோல் பெண்களை கை தட்டிக் கூப்பிட்டு  இறக்கி விட்டார். நல்ல பண்பாளர். 
அவர் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் என்னைப் பார்த்து அடிக்கடி ஷாருக்கான் என்றார். இப்ப சொல்லுங்க அவர் நம்பர தரட்டுமா ?
Patel Value: நெய் ஊற்றி சாப்பிட்டான் என்று பக்கத்து வீட்டுக்காரனை பொறாமைப்பட வைக்க பழைய சோறு சாப்பிட்ட தன் இலையில் எண்ணெயைத் தடவி வெளியில் வீசுவார்களாம் சிலர். அது போல் படேல் இன மக்கள் பிறர் பெருமைப்பட வேண்டுமென்று நினைத்து டிக்கட்டுக்கு அதிக பணம் தந்து சுற்றுலாத் தளங்களுக்கு உள்ளே செல்லாமல் முகப்பிலேயே நின்று போட்டோ எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை Patel Value என்கின்றனர்.




போரோபுதூர் 22.12.19. (மத்திய ஜாவா ) - சாண்டி புத்தர் கோயில் (சாண்டி என்றால் கோவில்).- 8ஆம் நூற்றாண்டு.
 இது சைலேந்தர மன்னர் நிறுவிய நகரம்.
காலையில பிரமணன்ல பொட்ட வெயில்ல  காஞ்சி போய் கோயிலப் பாத்தாலும் ஊர உட்டுப் பொறப்பட்டு போராபுதூர் புத்தர் கோயில் போற வழி முழுதும் 2 1/2 மணி நேரம் மழை பிச்சி உதறிடுச்சி - புத்தர் கருணையே கருணை . லேசா நின்ன மழை டிக்கட் வாங்ன உடனே மறுபடியும் கொட்ட ஆரம்பிச்சது.. வாடகைக்கு குடை தந்தார்கள் (10.000 இந்.ருப்யாவாம். எண்களை நாம் கமா போட்டு எழுதுவது போலன்றி இந்தோனேஷியாவில் புள்ளி வைத்து எழுதுகின்றனர். 50, 000 ஐ 50.000 என்றெழுதுகின்றனர் - எல்லா இடங்களிலும்).. ஆளுக்கு ஒரு குடையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றோம். முழுதும் லாவா கற்களால் ஆன கோயில். செங்குத்தான உயரமான படிகள். பல நிலை வட்டமான பிரகாரங்கள். ஒவ்வொரு பீடத்திலும் புத்தரை நடுவில் வைத்துவிட்டு மேலே நிறைய ஓட்டை விட்ட புனல் ஒன்றைக் கவிழ்த்தது போன்ற அமைப்பு பிரகாரம் முழுதும்..
 எல்லா நிலைகளையும் சேர்த்து மொத்தம் எவ்வளவு புத்தர் சிலைகள் உள்ளன என்று தயவுசெய்து கூகுளில் பார்க்கவும். எந்த படுபாவிக் கூட்டமோ ஒன்றிரண்டைத் தவிர எல்லா புத்தர் சிலைகளின் தலையையும் கை கால்களையும் உடைத்திருந்தது. "வாழ்க்கையில் நான் சிலவற்றைக் கடைப்பிடித்து நற்கதி அடைந்தேன். நீங்களும் அவற்றைக் கடைப்பிடித்து நீங்களும் உய்க. ஆனால் என் பெயரால் எதையும் செய்யாதீர்கள்" என்று புத்தர் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்ட காட்டுமிராண்டிக் கும்பல் செய்திருக்கலாம்.
ஞாயிறு மாலை என்பதால் செம கூட்டம்..ஊத்தும் மழையில் நூற்றுக்கணக்கான குடைகள் மலையில் ஏறுவது ரம்யமான காட்சி.. 
மழையை ரசிப்பதா, குடைக் கூட்டம் ஊர்ந்து செல்வதை ரசிப்பதா, மழையிலிருந்து கேமராக்களைக் காப்பாற்றுவதா, தூரத்திலிருந்தே புத்த விஹாரை (சாண்டி போராபுதூர் என்கின்றனர் உள்ளூரில்) ரசித்துக் கொண்டே மேலே ஏறுவதா எனக் குழம்பி இருந்தோம். புத்தர் வென்றார்.
மேல்  பிரகாரத்தைச் சுத்தி சுத்தி வந்து பனேராமா,  சில்அவுட், நேச்சுரல் ஃபிரேமிங் என்று படங்கள் எடுத்துக் கொண்டு 30  விநாடி புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக.. பாடலைப் பாடி வீடியோ எடுத்துக் கொண்டு திரும்பினோம். இறங்குகையில், பின்புலத்தில் புத்தர் கோயிலை வைத்து எங்களைப் போட்டோ எடுக்க ஒரு பெண்ணிடம் கேட்டோம். சந்தோஷமாக எடுத்துத் தந்தார். சும்மா செஞ்சா சும்மா சும்மா செய்யச் சொல்வது நம் குணம்தானே? புதிய வானம் புதிய பூமி பாடலின் ஒரு சரணம் நாங்கள் பாடி அவரைவிட்டு வீடியோ எடுக்கச் சொல்லிக் கேட்டோம்.. அவரின் மாணவர்களாம் 20 பேர் வந்து எங்களுடன் கைதட்டி ரசித்து நின்றதை அப்பெண் வீடியோ எடுத்துவிட்டு.. நான் இந்தோனேஷியாவை விரும்புகிறேன் என்பதை "அக்கு சின்டா இந்தோனேஷியா " என்று  தம் மொழியில் எங்களைக் கூற வைத்து தம் மொபைலில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுகிறேன் உன் ஐடியைத் தா என்று கேட்டார்.. அது.. வந்துன்னு நாங்க இழுத்தததப் பாத்தோடனேயே ஐடி மறந்துட்டேங்கறதக் கண்டு புடிச்சிட்டு வாட்ஸப் நம்பர வாங்கிட்டுப் போனது. 
கோயில் படம் போட்ட கீ செயின், பேனா, சட்டை விற்க கூட்டம் மண்டியது.. பேரம் பேசு என்று நம்மை எல்லா மொழிகளிலும் கேட்டனர். தாய்லாந்தைப் போலவே இங்கும் ரோட்டில் கூவி விற்கும் பொருட்களைவிட கடைகளில் மலிவாகவே இருந்தன. பேரம் பேசி ஆறு பத்து ரூபாய்க்கு நண்பர் வாங்கிய அதே பொருளை 10 பத்து ரூபாய்க்கு 10 நான் வாங்கினேன் என்று பெருமை அடிக்க நெனைக்கறதுக்குள்ளேயே இன்னொரு நண்பர் அதையே பத்து ரூபாய்க்கு பதினஞ்சு வாங்னேன்னு சொல்லிட்டு காருக்குப் போனார். ங வரிசையின் எல்லா எழுத்துக்களாலும் முகத்தை மாற்றினேன்.. வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்தானே?
இங்கு சாலைகளில் பல இடங்களில் காவலரோ, டிராபிக் சிக்னலோ இல்லை. ஆனால் கொடி ஒன்றை வைத்துக் கொண்டு ஒருவர் கண்ட்ரோல் செய்கிறார். அவருக்கு வாகன ஓட்டிகள் பணம் தந்து செல்கின்றனர். மிக அருமை.

மாலை வேளைகளில் சாலை ஓர நடைபாதை உணவுக் கடைகளில் குடும்பம் குடும்பமாக பாய்களில் அமர்ந்து உணவு அருந்தி உறவாடி மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காண முடிகிறது. அவர்களின் உடைகளும் உணவுகளும் நமக்கு வேண்டுமானால் ஏழைகளாகத் தெரியலாம் ஆனால் அவர்களின் முகங்களில் தோன்றும் மலர்ச்சியில் இறைவன் கூடாரமிட்டுக் கும்மியடிப்பதைக் காண முடிகிறது.


அசோக் - குரங்கு

இந்தோனேஷியா :
சுல்தான் அரண்மனை - பெரம்பனன் கோயில்
பொட்ட வெயிலும் பிசு பிசு மழையும் மாறி மாறித் தோன்றும் யோக்யகர்த்தாவில் சுல்தான் அரண்மனை & கோயில் பார்க்க நண்பரின் பெரிய காரில் புறப்பட்டோம்.. அவருடன் இன்னொரு நண்பர் தம் குடும்பத்துடன் பயணித்தோம். டிரைவருக்கு பாதை தெரியாததால் கூகுளான்ட்டி குரலின் வழிகாட்டுதலில் தெருக்களில் ஊர்ந்து சென்றோம். (பெங்களூர் டிராபிக்கை இனி யாரும் குறை சொல்லாதீர்) ஓட்டுனர் தவிர எல்லோருக்கும் தமிழ் தெரியுமாதலால் இளையராஜா பாடல் கோப்பை நீலப்பல் துணையுடன் காரின் ஒலிபெருக்கியில் இணைத்து பாட விட்டார் நண்பர். 'மன்றம் வந்த ‍ தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ'ன்னு எஸ்பிபி கேட் டோடனேயே அதே ஸ்பீக்கரில் 'அரண்மனை போக அம்பது மீட்டரில் வலது பக்கம் திரும்பு'ன்னு கூகுள் குருவம்மா ஆங்கிலத்தில் சொன்னது செம.,