Sunday, 19 January 2020

My Indonesia Trip

யோக்யகர்த்தா 22.12.19.
இந்தோனேஷியாவின் முக்கிய நகரம் யோக்யகர்த்தா - மாதர மன்னன் நிறுவியது. இந்த ஏர்போர்ட்டின் பெயர் :
Adisutjipto (அந்த ஊரு அண்ணாதுரை பேருபோல - கூகுளிச்சி கண்டுபுடிங்க ) ... கம்போடியா செல்ல விசா கட்டணம் 3500 ரூ. ஆனால், இந்தோனேஷியாவுக்கு வந்தபின் விசா (Visa on arrival) வாங்கினால் போதும் என்றார்கள். எவ்வளவு கேக்கப் போறாங்களோன்னு யோசிச்சிக்கிட்டே லைனில் நின்னோம். ஒருத்தருக்கு ஸ்டாம்ப் அடிக்க அரை நிமிடம் கூட ஆகவில்லை.. செம வேகம். விசாவுக்கு கட்டணம் இல்லையாம்... ஆனா அதுக்கப்பறம் போதைப் பொருள் இருக்கான்னு பாக்க குதிரை சைஸ்ல ஒரு மோப்ப நாய நம்மள மோந்து பாக்க உட்டான் பாருங்க... புளிய கரைச்சிடுச்சி... அப்பப்ப வெரிகுட் வெரிகுட்னு வேற பாராட்டிக்கிட்டே வந்தாரு ஆஃபிஸர்.. வியர்வை நாற்றம் அடிக்காத  சட்ட போட்டுட்டு வந்ததுக்கு நம்மளத்தான் பாராட்டுறார்னு நெனைச்சேன் - நாயப் பாராட்னாராம். 

சஞ்சய மன்னன் 8 - 10 நூற்றாண்டில் கட்டிய பிரம்பணன் ( பிராமணனலிருந்து வந்த வார்த்தையாம்) 
கோயில் சிறப்பைச் சொல்ல சில மணிகள் ஆவும். ஒரே வளாகத்தில் மொத்தம்  240 கோயில்களை 222 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டினான் என்கிறது வரலாறு. (நல்லவேள வாட்ஸப் அப்போ இல்ல - இருந்தா இது சாத்தியமா?)  அஸ்திவாரம் தவிர அனைத்து 
கோயில்களும் 
 நிலநடுக்கத்தால் தரைமட்டமாகி விட்டன.  ஆனால்  200 கோயில்களையும் புதுப்பிக்கத் திட்டமிட்டு அவற்றுள் 20 முடிந்து விட்டன கடந்த 100 ஆண்டுகளில்.  இந்த இருபதைப் பார்க்கவே நமக்கு 2 நாள் ஆவும். உள்ளே நுழைய டிக்கட் நம்ம ஊர் ரூ. 3500 வாங்கறாங்க (வெளிநாட்டினர்க்கு).   இலவசமாக வெல்கம் ட்ரிங்க் தந்தார்கள், (டீ, காபி, தண்ணீர் ஏதேனும் ஒன்று இலவசமாம் - மூணுமே ஒரே டேஸ்ட்தான்னு நாங்க 3 பேரும் கண்டுபுடிச்சிட்டோம் ). முழுக்க முழுக்க லாவா எரிமலைக்  குழம்பு கற்களால், Lock System எனப்படும் முறையில் கட்டப்பட்டது (தஞ்சை கோயிலும் இப்படித்தான் - இக்கோயிலை இடிக்க முடியாது.. வே(ணு)ணாம்னா மேலேயிருந்து அவிழ்த்துதான் எடுக்கணும்)
... பிரம்மா, சிவன், விஷ்ணு மூவருக்கும் தனித்தனியான  பிரம்மாண்டமான கோயில்கள், அதற்கு முன்னே அவர்களின் வாகனங்களான அன்னம், நந்தி, கருடன் இவற்றிற்கும் . கோயில்கள் உள்ளன - மிக அற்புதமான கலை நுணுக்கங்களுடன். இப்போ எல்லா தோண்டு, நடு கருவிகளும் இருந்தும்  நம்ம ஊர்ல ஒரு கரண்ட் கம்பத்த நட10 பேர் 12 வட, டீ சாப்டுட்டு செய்றாங்க. எதுவுமே இல்லாத எட்டாம் நூற்றாண்டில் எத வச்சி அளந்து, வெட்டி, கட்டி, ட்ரான்ஸ்போர்ட்டி, எரக்டிருப்பார்கள் ? இவற்றையெல்லாம் எங்களுக்கு விளக்குவதற்கு 10 USD யில் ஒரு கைடு வந்தார். மிக இனிமையாகத் தெளிவாக அனைத்தையும் விளக்கினார். நிச்சயமாக பல இந்தியர்களை விடவும் அதிகமாக ராமாயண, மகாபாரதக் கதைகளை அறிந்திருக்கிறார். (கல்லூரிப் பாடத் திட்டத்தில் உண்டாம் ) தஞ்சைப் பெரிய கோயில் , மாமல்லபுரம் போன்று கல் panel களில் இந்து புராணக் காட்சிகளை கற்களில் இக்கோயிலில் தத்ரூபமாக  வடிவமைத்திருக்கின்றனர்.
 கருவுற்ற சீதை வயிற்றின் வளைவு,  காவல் தெய்வங்களின் கவின்மிகு தோற்றம்,  சீதையை ராவணன் தூக்கிச் சென்றது, வாலி, சுக்ரீவன் சண்டை, லவ, குச விளையாடல்கள் என்று நுணுக்கமான வேலைப்பாடுகள். தமிழக சிற்பிகள் பலர் வந்து செய்ததாகக் கூறுகிறார். போகும் வழியில் பல இடங்களில் எங்கள் கைடு இலவசமாக உள்ளூர் மக்களுக்கு ஜாவனிய மொழியில் சில விளக்கங்கள் தந்தார். மேலே ஏறாதீர்கள் என்று அங்கங்கே ஆங்கிலத்தில் போர்டு எழுதி வைத்திருந்தும் Patel value கூட்டப் போட்டோ எடுக்க மேலே ஏறிய வெள்ளைத் தோல் பெண்களை கை தட்டிக் கூப்பிட்டு  இறக்கி விட்டார். நல்ல பண்பாளர். 
அவர் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் என்னைப் பார்த்து அடிக்கடி ஷாருக்கான் என்றார். இப்ப சொல்லுங்க அவர் நம்பர தரட்டுமா ?
Patel Value: நெய் ஊற்றி சாப்பிட்டான் என்று பக்கத்து வீட்டுக்காரனை பொறாமைப்பட வைக்க பழைய சோறு சாப்பிட்ட தன் இலையில் எண்ணெயைத் தடவி வெளியில் வீசுவார்களாம் சிலர். அது போல் படேல் இன மக்கள் பிறர் பெருமைப்பட வேண்டுமென்று நினைத்து டிக்கட்டுக்கு அதிக பணம் தந்து சுற்றுலாத் தளங்களுக்கு உள்ளே செல்லாமல் முகப்பிலேயே நின்று போட்டோ எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை Patel Value என்கின்றனர்.




போரோபுதூர் 22.12.19. (மத்திய ஜாவா ) - சாண்டி புத்தர் கோயில் (சாண்டி என்றால் கோவில்).- 8ஆம் நூற்றாண்டு.
 இது சைலேந்தர மன்னர் நிறுவிய நகரம்.
காலையில பிரமணன்ல பொட்ட வெயில்ல  காஞ்சி போய் கோயிலப் பாத்தாலும் ஊர உட்டுப் பொறப்பட்டு போராபுதூர் புத்தர் கோயில் போற வழி முழுதும் 2 1/2 மணி நேரம் மழை பிச்சி உதறிடுச்சி - புத்தர் கருணையே கருணை . லேசா நின்ன மழை டிக்கட் வாங்ன உடனே மறுபடியும் கொட்ட ஆரம்பிச்சது.. வாடகைக்கு குடை தந்தார்கள் (10.000 இந்.ருப்யாவாம். எண்களை நாம் கமா போட்டு எழுதுவது போலன்றி இந்தோனேஷியாவில் புள்ளி வைத்து எழுதுகின்றனர். 50, 000 ஐ 50.000 என்றெழுதுகின்றனர் - எல்லா இடங்களிலும்).. ஆளுக்கு ஒரு குடையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சென்றோம். முழுதும் லாவா கற்களால் ஆன கோயில். செங்குத்தான உயரமான படிகள். பல நிலை வட்டமான பிரகாரங்கள். ஒவ்வொரு பீடத்திலும் புத்தரை நடுவில் வைத்துவிட்டு மேலே நிறைய ஓட்டை விட்ட புனல் ஒன்றைக் கவிழ்த்தது போன்ற அமைப்பு பிரகாரம் முழுதும்..
 எல்லா நிலைகளையும் சேர்த்து மொத்தம் எவ்வளவு புத்தர் சிலைகள் உள்ளன என்று தயவுசெய்து கூகுளில் பார்க்கவும். எந்த படுபாவிக் கூட்டமோ ஒன்றிரண்டைத் தவிர எல்லா புத்தர் சிலைகளின் தலையையும் கை கால்களையும் உடைத்திருந்தது. "வாழ்க்கையில் நான் சிலவற்றைக் கடைப்பிடித்து நற்கதி அடைந்தேன். நீங்களும் அவற்றைக் கடைப்பிடித்து நீங்களும் உய்க. ஆனால் என் பெயரால் எதையும் செய்யாதீர்கள்" என்று புத்தர் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்ட காட்டுமிராண்டிக் கும்பல் செய்திருக்கலாம்.
ஞாயிறு மாலை என்பதால் செம கூட்டம்..ஊத்தும் மழையில் நூற்றுக்கணக்கான குடைகள் மலையில் ஏறுவது ரம்யமான காட்சி.. 
மழையை ரசிப்பதா, குடைக் கூட்டம் ஊர்ந்து செல்வதை ரசிப்பதா, மழையிலிருந்து கேமராக்களைக் காப்பாற்றுவதா, தூரத்திலிருந்தே புத்த விஹாரை (சாண்டி போராபுதூர் என்கின்றனர் உள்ளூரில்) ரசித்துக் கொண்டே மேலே ஏறுவதா எனக் குழம்பி இருந்தோம். புத்தர் வென்றார்.
மேல்  பிரகாரத்தைச் சுத்தி சுத்தி வந்து பனேராமா,  சில்அவுட், நேச்சுரல் ஃபிரேமிங் என்று படங்கள் எடுத்துக் கொண்டு 30  விநாடி புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக.. பாடலைப் பாடி வீடியோ எடுத்துக் கொண்டு திரும்பினோம். இறங்குகையில், பின்புலத்தில் புத்தர் கோயிலை வைத்து எங்களைப் போட்டோ எடுக்க ஒரு பெண்ணிடம் கேட்டோம். சந்தோஷமாக எடுத்துத் தந்தார். சும்மா செஞ்சா சும்மா சும்மா செய்யச் சொல்வது நம் குணம்தானே? புதிய வானம் புதிய பூமி பாடலின் ஒரு சரணம் நாங்கள் பாடி அவரைவிட்டு வீடியோ எடுக்கச் சொல்லிக் கேட்டோம்.. அவரின் மாணவர்களாம் 20 பேர் வந்து எங்களுடன் கைதட்டி ரசித்து நின்றதை அப்பெண் வீடியோ எடுத்துவிட்டு.. நான் இந்தோனேஷியாவை விரும்புகிறேன் என்பதை "அக்கு சின்டா இந்தோனேஷியா " என்று  தம் மொழியில் எங்களைக் கூற வைத்து தம் மொபைலில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுகிறேன் உன் ஐடியைத் தா என்று கேட்டார்.. அது.. வந்துன்னு நாங்க இழுத்தததப் பாத்தோடனேயே ஐடி மறந்துட்டேங்கறதக் கண்டு புடிச்சிட்டு வாட்ஸப் நம்பர வாங்கிட்டுப் போனது. 
கோயில் படம் போட்ட கீ செயின், பேனா, சட்டை விற்க கூட்டம் மண்டியது.. பேரம் பேசு என்று நம்மை எல்லா மொழிகளிலும் கேட்டனர். தாய்லாந்தைப் போலவே இங்கும் ரோட்டில் கூவி விற்கும் பொருட்களைவிட கடைகளில் மலிவாகவே இருந்தன. பேரம் பேசி ஆறு பத்து ரூபாய்க்கு நண்பர் வாங்கிய அதே பொருளை 10 பத்து ரூபாய்க்கு 10 நான் வாங்கினேன் என்று பெருமை அடிக்க நெனைக்கறதுக்குள்ளேயே இன்னொரு நண்பர் அதையே பத்து ரூபாய்க்கு பதினஞ்சு வாங்னேன்னு சொல்லிட்டு காருக்குப் போனார். ங வரிசையின் எல்லா எழுத்துக்களாலும் முகத்தை மாற்றினேன்.. வல்லவனுக்கு வல்லவன் இருப்பான்தானே?
இங்கு சாலைகளில் பல இடங்களில் காவலரோ, டிராபிக் சிக்னலோ இல்லை. ஆனால் கொடி ஒன்றை வைத்துக் கொண்டு ஒருவர் கண்ட்ரோல் செய்கிறார். அவருக்கு வாகன ஓட்டிகள் பணம் தந்து செல்கின்றனர். மிக அருமை.

மாலை வேளைகளில் சாலை ஓர நடைபாதை உணவுக் கடைகளில் குடும்பம் குடும்பமாக பாய்களில் அமர்ந்து உணவு அருந்தி உறவாடி மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காண முடிகிறது. அவர்களின் உடைகளும் உணவுகளும் நமக்கு வேண்டுமானால் ஏழைகளாகத் தெரியலாம் ஆனால் அவர்களின் முகங்களில் தோன்றும் மலர்ச்சியில் இறைவன் கூடாரமிட்டுக் கும்மியடிப்பதைக் காண முடிகிறது.


அசோக் - குரங்கு

இந்தோனேஷியா :
சுல்தான் அரண்மனை - பெரம்பனன் கோயில்
பொட்ட வெயிலும் பிசு பிசு மழையும் மாறி மாறித் தோன்றும் யோக்யகர்த்தாவில் சுல்தான் அரண்மனை & கோயில் பார்க்க நண்பரின் பெரிய காரில் புறப்பட்டோம்.. அவருடன் இன்னொரு நண்பர் தம் குடும்பத்துடன் பயணித்தோம். டிரைவருக்கு பாதை தெரியாததால் கூகுளான்ட்டி குரலின் வழிகாட்டுதலில் தெருக்களில் ஊர்ந்து சென்றோம். (பெங்களூர் டிராபிக்கை இனி யாரும் குறை சொல்லாதீர்) ஓட்டுனர் தவிர எல்லோருக்கும் தமிழ் தெரியுமாதலால் இளையராஜா பாடல் கோப்பை நீலப்பல் துணையுடன் காரின் ஒலிபெருக்கியில் இணைத்து பாட விட்டார் நண்பர். 'மன்றம் வந்த ‍ தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ'ன்னு எஸ்பிபி கேட் டோடனேயே அதே ஸ்பீக்கரில் 'அரண்மனை போக அம்பது மீட்டரில் வலது பக்கம் திரும்பு'ன்னு கூகுள் குருவம்மா ஆங்கிலத்தில் சொன்னது செம.,

Sunday, 29 December 2019

My Cambodia Trip

My brother Venkatesan Subbarayan took me to Singapore, Cambodia and Indonesia on a 11 day tour from 16 Dec-26 Dec, 2019. It was a great trip. In order to express my feelings and observations, I write this post in Tamil with photos. Feel free to comment on anything, text, photos, narration, layout, format etc.to improve the write-up.Thanks in advance my dear viewers.

ஆங்கர் வாட் கோயில் - உச்சிக் கோபுரத்தின் ஒருபகுதி !

என் சகோ.வெங்கடேசனுடன் சென்ற கம்போடிய, இந்தோனேசியப் பயணக் கட்டுரை !  கம்போடியா 17-20 டிசம்பர் 2019
சிங்கப்பூர் - 17. 12. 19
எங்கள் குடும்ப நண்பர் செல்வமுத்துக்குமார் அவர்கள் வீட்டிலிருந்து கம்போடியா போக உலகப்புகழ் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டிற்குள் நுழைந்தோம். முன்பு போல விமானத்தில் ஏற இங்கு போடிங் பாஸ் வாங்க லைனில் நிற்க வேண்டாம். ஏடிஎம் மிசின் கணக்கா இருந்த எலக்ட்ரானிக் டப்பாவுக்குள் பாஸ்போர்ட் காம்ச்சோடனே ஸ்க்ரீன்ல யப்பா பேரோட ஏம் பேரும் வந்தது. சில நொடிகளில் விமானத்தில் இருக்கை எண் போட்டு போடிங் பாஸ் வந்தது. (இன்னொரு நாட்டு மிசின்ல நம்ம பேரு வந்துதுன்ட்டு செம கெத்துல உள்ள போனா ரெண்டு கையாலயும் கைநாட்டு வைக்க சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்ஙெ... சரின்ட்டு வந்துட்டேன்),
ஏதோ லவுஞ்சாம்.. இந்த கடன் அட்ட வச்சிருக்கறவங்க உள்ள எலவசமா  போலாமாம்.. ( போடிங் பாஸ் வாங்கிட்டுப் போவணும் ) அண்ணாச்சி கூப்டுட்டுப் போய்ட்டார். உள்ள நொழயறப்வே அந்த ரிசப்ஷன் தங்கச்சிங்க சொல்லி சொல்லி அனுப்பிச்சிது "யோவ். இனும ஃப்ளைட் கெளம்பற நேரம்லாம் சொல்ல மாட்டோம். மைக்ல அனௌன்ஸ் பண்ற மைக்கேல் தம்பி ரிசைன் பண்ணி போய்ட்டுது - உனக்கா பொறுப்பு இருந்தா வண்டியப் பாத்து ஏறிக்கன்னு... அப்ப மண்டய மண்டய ஆட்டிட்டு உள்ள போய்ட்டோம்.... அங்க இருக்கற எது வேணா எவ்ளோ வேணா சாப்டுக்கலாமாம்.. குடிச்சிக்கலாமாம்... இதுவரைக்கும் பாக்காத ஐட்டம்லாம் ஒரு கட்டு கட்ட முடிவு பண்ணிட்டுப் போனா கறி, மீன் பக்கத்ல மைனாரிட்டாயா சைவ சாலட் சாராயம், சாட்டே, பம்பரம்னு தினுசு தினுசா.. சைவத்துல ஆனது எதயும் உட்டு வக்கில... கடிச்சிட்டு, குடிச்சிட்டு மொள்ள கெளம்பி பெராக்கு பாத்துகிட்டே போனோம் (போனேன்).. பின்ன ங்கிலீஷ் சாராயத்துக்கு செம படம், செட், லைட் போட்டு 2 பொண்ணுங்கள நிக்க வச்சி சிரிக்க சொன்னா பராக்கு பாக்காம என்ன செய்வேன்? ஆடி அசஞ்சி போடிங் கேட்குள்ள போனா அங்க ஒரு பெருசு கிரிக்கட் அம்பயர் Wide பாலுக்கு சிக்னல் குடுக்கற மாதிரி கைய ஆட்டி..'மூடிட்டாங்க.. நீ வண்டி ஏற முடியாது'ன்னிச்சி அர லிட்டர் அட்ரினல் சொறந்து முதுவெல்லாம் நனஞ்சி போச்சி.... நல்ல வேள பின்னாடி ஒரு பாப்பா நின்னு உட்டுத் தொலன்னு கையக் காட்டுச்சி... வண்டிய உடுறது பெரிய விஷயமில்ல... அடுத்த நாட்டுக்குப் போறேன்ட்டு போடிங் பாஸ வாங்கிட்டு போவாட்டி உட்டா பெருங் குத்தமாம்.. பின்னங்காலு பின் வழுக்கைத் தலயில தெறிக்க ஓடுனோம்..
மனசுக்குள்ள 'நமக்குன்னு வந்து சேருதுங்களே'ன்னு நெனச்சாலும் வழியில, அப்றம் உள்ளே வாசப்படியில 'ஹலோ .. வெல்கம்'னு சொல்லி வெறுப்பேத்னாங்க விமான ஊழியைத் தங்கச்சிங்க . உள்ள கால வச்சி... பெல்ட்ட போட்டோடனேயே வண்டி நவுர ஆரம்பிச்சிடுச்சி. உடனேதான் சட்டுன்னு ஞாபகம் வந்து மூச்சு விட ஆரம்பிச்சோம். யப்பா... செம அனுபவம். வெளீல சொல்லாதீங்க..இந்த லட்சணத்துல ’சும்மா வெல விசாரிக்கலாம் வா’ன்னு அண்ணன ரோலக்ஸ் கடைக்குக் கூப்பிட்டேன்.. மறுத்துட்டாரு.
முடிந்தால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள்
18.12.19- அதிசயங்களின் இன்னொரு பெயர் - ஆங்கர் வாட்..
எங்கள் சொந்த ஊரான ’ஆக்கூர் (மயிலாடுதுறை) முதல் ஆங்கர் வாட் வரை’ன்னு கூட நீங்க தலைப்பு வச்சிக்கலாம் !

சாம்சங் போன் & ஐபோன் - இதில் எடுக்கும் படங்கள் பற்றி எனக்கும் என் அண்ணனுக்கும் கருத்து வேறுபாடு வந்தது.. அவர்து ஐபோன் 8 .. (பேச, படம் எடுக்க ) ஆனால் சாம்ஸங் மாதிரி படம் பளிச்னு எதிலும் வராது என்பவர்..என்து 5S- தரமாக படம் எடுக்க மட்டும் வைத்துள்ளேன். ஐஃபோன் படத்துக்கிட்ட எதுவும் வராது. கனியிருப்பக் காய் கவருவது நல்லதா என்றேன்.. இது பற்றி எங்கள் குடும்ப நண்பர் பாலாஜி சிங்கப்பூரில் கம்போடியா போகுமுன் சொன்னது.. "சாம்ஸங்கா.. ? படம் எடுத்தா மைதா மாவு மாதிரி வருமே , அதுவா மாமா?" என்றார்.. ஆகா..நமக்கு சப்போட் பண்ண ஆள் இருக்கார்ங்ற திருப்தி.. அண்ணன் விமானத்தில் ஏறின உடன் மறுபடியும் ஆரம்பிச்சார்.. சாம்ஸங் பச்ச - பளீர் - தெளிவுன்னு... அவரப் புரிய வக்கிறது கஷ்டம்னு உட்டுட்டேன்.. மூணு மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம் கம்போடியா.


சியாம் ரீப் இண்டெர்நேஷனல் ஏர்போர்ட் (சியாம் - தாய்லாந்து, ரீப் - reap-  வெற்றி - தாய்லாந்தைப் போரில் வென்றதால் அந்தப் பெயராம்- நாமளா இருந்தா அதுக்கு ’சியாம்கொண்டான்’னு பேர் வச்சி அண்ணாதுரை செலய வச்சி  அதுக்கும் கீழே வெத்தலப்பாக்கு எச்சி துப்பி... சரி வேணாம் உடுங்க) ஹோட்டலுக்கு டுக்டுக் என்னும் வாகனத்தில் (சைக்கள் ரிக்ஷாவின் சீட்களை மட்டும் டூவீலரில் இணைந்த வண்டி) போனோம். எங்கள் விமானத்தில் வந்த 2 பெண் பயணிகளும் கூட அந்த டுக்டுக் வண்டியில் வந்தனர்.. என்ன தட்றத்கு அவங்கள்ட்ட ஆரம்பிச்சார் அண்ணன் .. அதுல ஒரு அம்மா (சிங்.ல் தமிழ் டீச்சராம்) " ஐயய்யோ பளிச் படம்னா சாம்ஸங்தான்" னுச்சா.. எங்கண்ணன கைல புடிக்க முடீல. .. ஆட்டம் போட ஆரம்பிச்சார்.. உட்டுட்டேன்..

10 நாட்களுள் ஏதேனும்
3 நாட்களுக்கு மட்டும்
மறுநாள் காலை மூன்று நாள் நுழைவுக்கட்டணமாக (எல்லா வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் சேர்த்து) தலைக்கு 62 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி ஒவ்வொருத்தரின் படம் போட்ட டிக்கெட் பெற்று சிறிது தூரத்திலேயே இருந்த  உலக அதிசயங்களுள் ஒன்றான அங்கர் வாட் கோயில் போனோம்...
 அகழி - வெண்மை நிறப்பாலம் இரப்பர் அமைப்பில் மிதக்கிறது

அதிகாலை 4.30 க்கு சூரிய உதயத்தில் கோயிலின் நிழல் முன்னேயுள்ள குளம் என்ற பெயரில் குட்டை அளவு தண்ணீரில் நன்கு தெரிவது ரம்யம் என்ற செவி வழிச் செய்தியைக் கேட்டு விட்டு  டிபனை கையில் எடுத்துக் கொண்டு அரக்க பரக்க கும்மிருட்டில் மொபைல் வெளிச்சத்தில் (இயற்கையை சிதைக்காமல் இருக்க மின்னொளி போடவில்லை) ஓடிப் பார்த்தால் குட்டைய சுத்தி 200 பேர் எங்களுக்கு முன்னாலேயே வந்து  நின்று கொண்டிருந்தனர்.. கும்மிருட்டில் இவ்ளோ பேர் வெளிநாட்லேர்ந்து வராங்கனா ஏதோ இருக்கும் போலன்ட்டு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சோம்.  கசமுசா சத்தம் நேரம் ஆக ஆகக் குறைந்தது.. சிறிது நேரத்திலேயே .. ஒரு 700 பேர் 700+ ஒளிப்பதிவுக் கருவியோட முண்டியடிச்சிக்கிட்டு ரெடியானார்கள்... மார்கழி மாசம் இழுத்துப்  போத்திக்கிட்டு தூங்கற சுகத்த உட்டுட்டு இப்படி குட்ட பக்கத்துல குண்டக்க மண்டக்கன்னு கூட்டமா நிக்க வச்சுட்டாளேன்னு பொலம்ப உடாம காரிருள் மறையத் துவங்கிய உடன் அந்த மெல்லிய ஒளியில் செயவர்மன் கலைநயம்  தெரியத் துவங்கியது. (அவனுக்கு செயல்வர்மன்னு பெயர் வச்சிருக்கலாம் !) கோபுர நிழல்கள் சில்அவுட்டில் (Silhoutte) தெரிய அதன் பிம்பம் குட்டைத் தண்ணீரில் தெரிய.. தமிழனின் திறமைகளுக்கு அளவு என்று எதுவுமில்லை என்று மீண்டும் உரைத்தது போல் இருந்தது. (அப்போது யாராவது என் சட்டையைக் கழட்டிக்கொண்டு போனாலும் உணர்ந்திருக்க மாட்டேன்- அத்தனை ரம்யம்).  உலகின் எல்லா தயாரிப்பு போன்களும் கேமராக்களும் அக்காட்சியைக் கவ்வித் தம் பிறவிப் பயனை அடைந்தன.  ஸ்டீவ் ஜாப்ஸ் புண்ணியத்தில் பாதிபேர் ஃபேஸ்புக்கில் அங்கிருந்தே லைவ் அப் டேட் தந்தனர்.. கைடுகள் சிலருக்காக விளக்கியதை அருகிருந்த  பலர் ஒட்டுக்கேட்டபடி நின்றனர். அதிசயம் என்னான்னா அங்கே டீ, காபி, முரேக், பீடி, சிகரெட் விக்கவில்லை யாரும் அங்கே.  வித்தாலும் வாங்கியிருக்க மாட்டார்கள்.
ஒன்றரை மணி நேரம் நின்னது ஒர்த்துன்னு ஒடனே புரிஞ்சிடுச்சி எனக்கு. நிதானமாக DSLR, ஐஃபோன் & மைதா ஃபோன்களில் கிளிக்கிட்டு அங்கேயே கட்டுசோற (வாழப் பழமும் பிரட்டும்)  சாப்பிட்டு ரூமுக்கு திரும்பிட்டோம். ரிலாக்ஸாகி விட்டு மீண்டும் அங்கர் வாட்டுக்குப் படையெடுத்தோம்.. ஒரு கைடை (தலைக்கு 10 டாலர்) அமர்த்திக் கொண்டு போனோம்.. விஷ்ணு கோயிலாம் அது. புத்தராக மாற்ற முயற்சி செய்துள்ளனர் இடைச் செருகர்கள். லெட்சுமியின் தலையை எடுத்த சிலையை (அழிச்சிட்டாங்களாமா) இன்றும் வழிபடுகின்றனர் மக்கள். அழகாக பட்டுப்புடைவை உடுத்தி  (முன்னால் சிகரெட் கூட வைத்துப் படைத்து ). மிக உயர விஷ்ணு சிலை - எங்க நீ வராமலே செத்துப் போய்விடுவியோன்னு நினைச்சேன்னு நம்மைப் பார்த்து சொல்வது போல் நின்றார். வழக்கம்போல கீழே புத்த பிக்குகள் போல உடையணிந்த இன்ஸ்டண்ட் அர்ச்சகர்கள் ஊதுவத்தி காட்டி சில்லறை பார்த்துகொண்டிருந்தனர். ஒரு நீண்ட பாதையில் நடந்தபின் மெயின் கோயிலை அடைந்தோம்.

நான்கு புறமும் உள்ள மிக நீஈஈஈண்ட பிரகாரத்தின் சுவர் முழுதும் ராமாயண, மகாபாரதக் கதையை கற்களில் செதுக்கி வைத்தது சிறப்பு...எங்கும் இடைவெளியில்லாமல் மிக நீண்ட தூரம் கதை கோர்வையாக வருகிறது - சிலைகளாக. கைடு நம் புராணக் கதைகளைப் பிச்சி உதறுகிறார். இந்தியன்தான நீ? எங்க, ராமரின் பத்து அவதாரப் பேரையும் சொல்லுன்னு என் புராண அறிவைச் சோதித்தார். டூரிசம்  படிப்பில் இதெல்லாம் கட்டாயமாம் அங்கே. ’நான் அதற்கும் மேல் இந்தி திரைப்படங்களைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன்’ என்றார் கைடு ( சினிமாவப் பாத்தா நல்ல ட்ரஸ எப்படிக் கிழிச்சிட்டு போட்டுக்கறதுன்னுதான கத்துக்கணும்?)

மூன்றடுக்கில் கோயில். ஒவ்வொரு தளத்திலும் லைப்ரரி, குளம், வழிபாட்டு இடம், ஆண் பெண் இருபாலக்கும் தனித்தனியே மிக நேர்த்தியாகக் கட்டி அவ்வளவு பெரிய கோவிலைச் சுற்றி (அளவை நீங்களே கண்டறிந்து வியந்து கொள்க) 800 வருடத்திற்கும் முன் கட்டிய அகழியில் இன்றும் தண்ணீர் நிற்க வைத்ததுதான் சிறப்பு. மூன்றாவது தளம் மன்னர்கள் வழிபடவாம்...

அங்கு நின்று, அமர்ந்து, படுத்து படம் எடுத்தேன்.. ஒரு 
கட்டத்தில் பொறி தட்டி ஒரு காட்சியை ஒரே ஆங்கிளில் இருந்து ஐபோனிலும் மைதாவிலும் எடுத்து என் சகோ.விடம் காட்ட இன்ஸ்டன்ட் ஞானம் வந்து என்னைப் பாராட்டித் தள்ளி விட்டார். மைதாவின் மோகம் தீர்ந்து ஐஃபோன் பெரும் யோகம் என்று உணர்ந்து கூறினார். தமிழனின் கட்டடக்கலையை அங்குலம் அங்குலமாகப் பார்க்க முடிந்தது. மூன்றாவது தளம் ஏறும் போது லேசாக மூச்சு முட்டியது.. அண்ணன் என்னிடம்  "நம்ம உடம்பையே தூக்கிட்டு இங்க ஏற முடிலயே நமக்கு?... அத்தனை டன் எடையுள்ள கற்களை கச்சிதமாக அறுத்து எப்படித் தூக்கி வந்து நட்டிருப்பான்னு யோசி" என்று கேட்டார். இவுருக்கு ஐஐடியில அந்தக் காலத்துலயே சிவில் இஞ்சினீரிங் சீட் குடுத்தது சரிதான்னு நெனைக்க வச்சார்.

அப்சரஸ் எனும் அமைப்பு இந்தக் கோயிலைப் பராமரித்து புனரமைத்து வருகின்றனர்..
இங்கு பாராட்ட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. எங்குமே 'அனிதா ஐ லவ் யூ' என்று ஆணியால் எழுதிய குட்டிச்சுவர்ச் செய்திகள் எதையும் காண முடியவில்லை.
குப்பை, வெத்தலப் பாக்கு எச்சி இல்லை. எல்லோருமே மிகவும் கண்ணியமாகப், பணிவாக சேவையாற்றுகின்றனர். படம் எடுத்தால் நின்று பொறுமை காத்து வழி விடுகின்றனர்.
  ராமாயண, மகாபாரதக் கதைகளை கம்போடிய கைடுகள் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பரப்பி வருவது பாராட்டுக்குரியது.  போட்டோகிராஃபியில் வழக்கமான சதுர, செவ்வக வடிவ ஃப்ரேம் இல்லாமல் இயற்கையாக உள்ள எல்லைகளை மெயின் சப்ஜக்ட் சுற்றி வைப்பது நேச்சுரல் பிரேமிங் என்பர் (Natural framing) .. (கூகுள் செய்க).. அம்சமான பல நூறு நேச்சுரல் ஃபிரேம்களை கொட்டிக் கொட்டிக் கட்டிய கோயில் இது. தஞ்சாவூர்க் கோயில்போல இண்டர்லாக் முறையில் கட்டப்பட்ட கோயில் இது.     




            
ஆக, இதுவரை அங்கர் வாட் பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு மூட்டுவலி வந்து முடங்கிப் போகுமுன் போய்விட்டு வரத் திட்டமிடுங்கள். உங்கள் கம்பெனி எல் டீ ஸி பணம் தரலைன்னாலும் பரவாயில்லை. கைக்காசப் போட்டாவது போய்ட்டு வந்துருங்க...